நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே!.
| [ 1]
|
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி; அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கோற்று அடியாளால்; உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .
| [ 2]
|
பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள் மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்; அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .
| [ 3]
|
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்? பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
| [ 4]
|
கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே, ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்; தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்; ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே!
| [ 5]
|
Go to top |
வார் இருங்குழல், வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்- தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த, கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய் ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!
| [ 6]
|
பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை; மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்; எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓதீர்; உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!
| [ 7]
|
வலையம் வைத்த கூற்றம் ஈவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு, சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால், கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ- உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!
| [ 8]
|
வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே? ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று; தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உந்தம் ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!
| [ 9]
|
ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம் ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி, கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.
| [ 10]
|
Go to top |